ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்ய வேண்டிய மிகச் சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை. இதன் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் ஒருசேர பெறமுடியும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தைப் பெற்றான் என்று புராணங்களில் கூறப்படுகிறது.
குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது.லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும்.
சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து, அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி, அதன்மேல் ஓர் தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரித்திட வேண்டும். பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை ஆரம்பிக்கலாம். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரமான “குபேராய நமஹ”, “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி குபேரனுக்கு உகந்த தாமரை மலரால் பூஜிக்க வேண்டும்.பூஜை முடித்த பின் பால் பாயசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக வைக்கப்படும் காசினை பூஜை முடிந்தவுடன் பெட்டகங்களில் வைத்துவிடலாம்.
இந்த பூஜையை செய்ய இரண்டே இரண்டு நிபந்தனைகள் மட்டுமே உள்ளது. ஒன்று நாம் சரியான நாளை தேர்ந்தெடுப்பது அவசியம். இதை ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ தொடர்ந்து ஒரே நாளில் செய்ய வேண்டும். அதாவது, ஒன்பது வாரம் செய்ய நினைப்போர் வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் இதை செய்யலாம். அதுபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்போர் மாதா மாதம் பௌர்ணமி நாட்களில் செய்யலாம். இதை ஒருவரே தொடர்ந்து செய்ய வேண்டும். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம். பூஜையில் 81 நாணயங்கள் வைக்க வேண்டும். அது அவரவரின் வசதிக்கு ஏற்ப ஒரு ரூபாய் அல்லது 10 ருபாய் நாணயமாகக்கூட இருக்கலாம். ஆனால் 81 நாணயங்களும் ஒரே மதிப்பிலான நாணயங்களாக இருக்க வேண்டும்.
பூஜையன்று அதிகாலை நீராடிவிட்டு குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்றவேண்டும். அடுத்து இந்த பூஜை தடைபடாமல் இருக்க மகாகணபதியை மனதார வேண்டிக் கொள்வது அவசியம். பிறகு குபேர எந்திர கோலம் வரைந்து அதில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் என்பதால், குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.
ஒன்பது வார அல்லது மாத முடிவில் சேர்ந்திருக்கும் 81 வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று சிவன் கோயிலில் உள்ள உண்டியலில் போட்டுவிடுங்கள். சிவனே குபேரனுக்கு செல்வம் அனைத்தையும் அளித்தவர்.அதனாலேயே சிவன் கோயில் உண்டியலில் போடவேண்டும். பின்பு மங்களப் பொருட்களை வைத்து சுமங்கலிகளுக்கு கொடுத்தால், மகாலட்சுமியே சுமங்கலி ரூபத்தில் ஆசிர்வதிப்பாள் என்பது நம்பிக்கை. தொடர்ந்து குபேர விளக்கை ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருந்த துன்பங்கள், கடன் பிரச்னை, சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல் வாழ்வு கிடைக்கும்.லட்சுமி குபேர பூஜையினை தீபாவளி திருநாள், சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடுவது மிகுந்த பலன்களை தரும்.
மகி
The post நிறைவான செல்வம் அருளும் லட்சுமி குபேர பூஜை! appeared first on Dinakaran.