
புதுடெல்லி,
18வது ஐ.பி.எல். தொடரின் சாம்பியன் பட்டத்தை ரஜத் படிதார் தலைமையிலான ஆர்.சி.பி அணி வென்றது. இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வீழ்த்தியது. அதற்கு முன் குவாலிபயர் 2 போட்டியில் மும்பைக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் 86* ரன்களை அடித்து பஞ்சாப்பை வெற்றிப் பெற வைத்தார்.
இருப்பினும் இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஷஷாங் சிங் ரன் அவுட்டாகி பஞ்சாப்பின் வெற்றியைப் பறிகொடுக்கப் பார்த்தார். அதன் காரணமாக கோபமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் போட்டியின் முடிவில் ஷஷாங் சிங்கிடம் கோபத்தை காட்டினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரேயாஸ் தம்முடைய கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும் என்று ஷஷாங் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அந்த கோபத்துக்கு நான் தகுதியானவன். ஸ்ரேயாஸ் என்னுடைய கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும். அந்த முக்கியமான நேரத்தில் உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்று ஸ்ரேயாஸ் சொன்னார்.
இருப்பினும் அன்று இரவு என்னை உணவு விருந்துக்கு அவர் அழைத்துச் சென்றார். மற்ற கேப்டன்களிடம் பேசிய நான் அவர்களைப் பார்த்துள்ளேன். என்னைப் பொறுத்த வரை ஸ்ரேயாஸை தவிர்த்து உலக கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன் இல்லை. அவர் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து சமமாக நடத்தினார்.
எங்களுடைய இளம் வீரர்கள் அவரை கூலான மனிதராக பார்ப்பார்கள். அவர் உங்களிடம் ஏதாவது ஆலோசனைகள் இருந்தால் அதை என்னிடம் வந்து சொல்லுங்கள் என்று போட்டியின் போது சொல்லுவார். அது சரியான ஆலோசனையாக இருக்கும் பட்சத்தில் அவர் அதை ஏற்பார். இது அரிதானது.
பைனலில் புவனேஸ்வரிடம் 19வது ஓவரில் 16 - 17 ரன்களை அடித்து 20-வது ஓவரில் 24 ரன்கள் மட்டுமே தேவைப்பட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரிடம் 13 ரன்கள் மட்டுமே கிடைத்ததால் கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.