
நெல்லை,
டி.என்.பி.எல். தொடரில் நெல்லையில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி திண்டுக்கல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவின் ஒரு ரன்னிலும், ஹரி நிஷாந்த் 10 ரன்களிலும் அவர்களை தொடர்ந்து அபிஷேக் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபால் சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த சன்னி சந்து 25 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜேந்திரன் விவேக் (20 பந்துகளில் 35 ரன்கள்) அதிரடியாக விளையாடி சேலம் அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்.
ஒருமுனையில் நிலைத்து ஆடிய நிதிஷ் ராஜகோபால் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் கடந்த பிறகும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜகோபால் 74 ரன்களில் ஆட்டமிழந்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேலம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.