நிதின் கட்கரியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு: தமிழக திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தல்

3 hours ago 2

சென்னை,

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைப்போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்கரியை, டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அன்புமணியின் கோரிக்கைகள்:-

1. விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விக்கிவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான பகுதியில் நீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாத நிலையில், அவற்றை உடனடியாகத் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும்.

2. திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும்.

3. தேசிய நெடுஞ்சாலை எண் 47-ல் சேலத்தையடுத்த மாமங்கலத்தில் சிறிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான பகுதியை 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

5. சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் முதல் செங்கல்பட்டு வரை பறக்கும் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

6. வாணியம்பாடி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோபிநத்தம்பட்டி குறுக்கு சாலை முதல் அயோத்தியாப் பட்டினம் வரையிலான 4 வழிச் சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.

7. ஓசூர் - தருமபுரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ( எண் 844) புளிக்கரை - நக்கல்பட்டி கிராம சாலை சந்திப்பில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

8. தொப்பூர் பவானி NH -555H தேசிய நெடுஞ்சாலையில் மேச்சேரி அடுத்த எருமப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைக்கும் பணியை கைவிட வேண்டும் இந்தச் சாலையை இரண்டு புறமும் 10 அடி அகலப்படுத்தி சேதமடைந்த சாலைகளை சீரமைத்த பிறகு சுங்கச்சாவடி அமைக்க வேண்டும்.

9.மேச்சேரி பேரூராட்சி வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையால் மேச்சேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க மேச்சேரி பேரூராட்சி பகுதியில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.

10. தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் முதல் குரும்பட்டி வரையிலும், அதே நெடுஞ்சாலையில் சவுலூர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைத்துத் தர வேண்டும்.

11. தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புத்தூர் பிரிவு, சேஷம்பட்டி பிரிவு, தேவர் ஊத்துப்பள்ளம் பிரிவு, புறவடை, ஜாகீர் ஆகிய 5 இடங்களில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

12. தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டல்பட்டி என்ற இடத்தில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தை மாற்றி பழைய தருமபுரியில் அமைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கைகள் வைத்தார்.

அன்புமணி ராமதாசின் கோரிக்கைகளைக் கேட்ட மத்திய மந்திரி நிதின் கட்கரி அந்தக் கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்மபுரி எஸ்.பி.வெங்கடேஸ்வரன், சேலம் மேற்கு அருள், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Read Entire Article