திருநெல்வேலி: நிதியும் கிடையாது, நீதியும் இல்லை என்று மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நெல்லையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.8,772 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது: 2023-ல் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால், இடைக்கால நிதியுதவியைக் கூட வழங்கவில்லை. நீதிமன்றத்தை நாடிய பின்னரே ரூ.276 கோடி மட்டும் வழங்கினர். தமிழகம் கேட்ட ரூ.37,904 கோடியில் ஒரு சதவீதத்தைக் கூட மத்திய அரசு கொடுக்கவில்லை. ஆனாலும், மாநில அரசின் நிதியில் பணிகளை மேற்கொண்டோம்.