
மாசி மாதத்தில் பவுர்ணமியும் மகம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வருகிற நன்னாள்தான் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாசி மகம் நாளை (12.3.2025) வருகிறது. நாளை அதிகாலை 3.53 மணி துவங்கி, மறுநாள் காலை 5.09 மணி வரைக்கும் மகம் நட்சத்திரம் இருக்கிறது.
மாசி மகம் வரும் நாளை 'கடலாடும் நாள்', 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைப்பார்கள். இந்த நாளில் புனித தலங்களிலுள்ள நீர்நிலைகளில் சென்று நீராடினால் பல ஜென்மங்கள் செய்த பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் கோவில்களில் தீர்த்தவாரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். அதிலும் கங்கை உட்பட அனைத்து புண்ணிய நதிகளுமே சங்கமிப்பதாக கருதப்படுகிற கும்பகோணம் சென்று புனித நீராடினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், அனைவராலும் கும்பகோணத்திற்கோ அல்லது புண்ணிய தீர்த்தங்களுக்கோ சென்று புனித நீராட முடியாது. ஆறு, குளம் போன்றவற்றில் நீராட வாய்ப்பு இல்லாதவர்கள், அங்கு செல்ல முடியாத சூழல் இருப்பவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே புனித நீராடிய பலரனை பெற முடியும்.
வீட்டின் பூஜை அறையில் அல்லது வழிபடும் சாமி படத்திற்கு அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். பூஜைக்கு சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. செம்பு, பித்தளை பாத்திரங்கள் அல்லது மண்ணால் ஆன பாத்திரத்தை பயன்படுத்தவேண்டும்.
தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் சிறிது மஞ்சள் தூளை போட்டு, வாசனை பொடி சேர்க்கவேண்டும். கங்கை தீர்த்தம் இருந்தாலும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். அந்த தண்ணீருக்கு தீப, தூப ஆராதனை காட்டி, நவ நதிகளின் (புண்ணிய தீர்த்தங்கள்) பெயர்களை சொல்லி வேண்டுதலை வைக்க வேண்டும். "எங்கள் வீட்டில் உள்ள இந்த பாத்திரத்தில் உள்ள நீரில் எழுந்தருளி, நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை போக்கி புனித நீராடிய பலனை வழங்கவேண்டும்'' என வேண்டிக்கொண்டு அந்த தண்ணீரை சிறிது தலையில் தெளிக்க வேண்டும். தீர்த்தமாக கொஞ்சம் குடித்துக்கொள்ளலாம். அதன்பின் அந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீர் முழுவதையும் குளிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் நீர், பூஜையில் வைத்தபின் அது தீர்த்தத்திற்கு இணையான புனித தன்மையை பெற்று விடுவதால் இந்த தண்ணீரை பயன்படுத்தி வீட்டிலேயே புனித நீராடிய பலனை பெறலாம்.