ஜம்மு – காஷ்மீர்: நாம் யாரும் போரை விரும்பவில்லை மற்றும் ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மேம்படவே விரும்புவதாகவும் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
பயங்கரவாதி முகாம்களைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்கின. இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிரம்மோஸ் ஏவுகணை, ரஃபேல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவத்தின் கர்னல் சோபியா குரேஷி, விமானப் படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விங் கமாண்டர் சோபியா குரேஷி விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளுக்கு பயிற்சி இடம், ஆள் சேர்ப்பு, தங்கும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீவிரவாதிகளின் இலக்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத முகாம்களை அழிக்க நள்ளிரவு 1.05 மணி முதல் 1.30 வரை தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகவே உள்ளது என விங் கமாண்டர் சோபியா குரேஷி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக பாகிஸ்தானை கடுமையாக கண்டித்தார். நாம் யாரும் போரை விரும்பவில்லை. ஜம்மு-காஷ்மீரில் நிலைமை மேம்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். அதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் தங்கள் துப்பாக்கிகளை கீழே போட வேண்டும். இந்த தாக்குதல் பஹல்காமில் தொடங்கியது. அங்கு அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தகுந்த பதிலடி கிடைக்கும் என்று ஒன்றிய அரசு கூறியிருந்தது. அதன்படி பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. பதிலடி கொடுப்பதற்கான சரியான முறை இதுதான். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளன. ராணுவ அமைப்புகளுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
The post நாம் யாரும் போரை விரும்பவில்லை; ஜம்மு-காஷ்மீரின் நிலைமை மேம்படவே விருப்பம்: காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பேச்சு appeared first on Dinakaran.