சென்னை: நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்துவரும் இளஞ்சியம் (வயது 50) என்பவர் தனது மகன்வழிப் பேரன் சுஜித் (வயது 5) மற்றும் மகன்வழிப் பேத்தி ஐவிழி (வயது 3) ஆகிய மூவரும் நேற்று 7.4.2025 பிற்பகல் 3.00 மணியளவில் தங்களது தோட்டத்திற்கு சென்ற போது,
6.4.2025 அன்று இரவு வீசிய பலத்த மழை மற்றும் காற்றினால் மின் கம்பிகள் சேதமடைந்து விவசாய நிலத்தில் இருந்த இரும்புக் கம்பிவேலி மீது விழுந்த நிலையில், அந்தக் கம்பிவேலியை மேற்படி மூவரும் தொட்டபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.