நான் பெரிய ஆளா?.. நீ பெரிய ஆளா?.. நடுரோட்டில் அரசு பள்ளி மாணவிகள் கட்டிப்புரண்டு சண்டை

4 hours ago 3

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.

அதே நேரம் திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் இரு பள்ளிகளுக்கும் இடையில் நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்ற பாணியில் பதிவுகள் போட்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைத்தள சண்டை முற்றியதில் கோபமடைந்த திருப்பூர் பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் மாலை பஸ் ஏறி 10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கணபதிபாளையம் பள்ளி முன்பு சென்று அந்த மாணவிகளிடம் சாலையிலேயே தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சண்டை பெரிதானதில் சாலையே போர்க்களமானது. இளம் வயது மாணவிகள் சிலர் முகத்தை மறைத்துக் கொண்டும், பலர் முகத்தை மறைக்காமலும் சாலையில் தகராறில் ஈடுபட அந்த பகுதியே போர்க்கோலம் ஆகிவிட்டது. சாலை முழுவதும் மாணவிகளின் அடிதடியை பார்த்து பொதுமக்கள் திகைத்துப்போக ஒரு சிலர் மட்டும் அதை தடுக்க முற்பட்டுள்ளனர்.

தடுக்க முற்பட்டவர்களிடமும் மாணவிகள் சண்டை போட்டு உள்ளனர். இது பற்றி பள்ளி சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து பேசி உள்ளனர். மேலும் மாணவிகள் தாக்கிக்கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article