
பிலடெல்பியா,
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும்.
இதில் நேற்று முன்தினம் 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சி 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்பெரன்ஸ் டி துனிசை (துனிசியா) பந்தாடியது. செல்சி அணியில் டோசின் அடராபியாயோ, லியாம் டெலப், டைரிக் ஜார்ஜ் ஆகியோர் கோல் போட்டனர்.
இதே பிரிவில் நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் எப்.சி. (அமெரிக்கா)- பிளமெங்கோ (பிரேசில்) இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
'டி' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த பிளமெங்கோ (7 புள்ளி), செல்சி (6 புள்ளி) அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னதாக 'சி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் பென்பிகா (போர்ச்சுகல்) 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச்சுக்கு (ஜெர்மனி) அதிர்ச்சி அளித்தது. பேயர்ன் முனிச்சுக்கு எதிராக 14-வது முறையாக மோதிய பென்பிகா அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இதே பிரிவில் ஆக்லாந்து சிட்டி (நியூசிலாந்து)- போகா ஜூனியர்ஸ் (அர்ஜென்டினா) அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. சி' பிரிவில் பென்பிகா (7 புள்ளி), பேயர்ன் முனிச் (6 புள்ளி) அணிகள் முறையே 'டாப்-2' இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.