நாசிக் தர்கா இடிப்பின்போது வன்முறை; 21 போலீசார் காயம்

1 day ago 4

நாசிக்: நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறை சம்பவத்தில் 21 போலீசார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சத்பீர் தர்கா என்ற பெயரில் தர்கா உள்ளது. சட்டவிரோதமான முறையில் உள்ள இந்த தர்காவை இடித்து அகற்ற நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, தர்காவை இடித்து அகற்றலாம் என உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தர்காவை இடிக்க நாசிக் நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வந்தனர். இதையறிந்து அங்கு திரண்ட ஒரு கும்பல், தர்காவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆத்திரமடைந்த கும்பலை சேர்ந்தவர்கள், திடீரென போலீஸ் அதிகாரிகள் மீதும், சமாதானம் செய்ய சென்ற முஸ்லிம்கள் தலைவர்கள் மீதும் சரமாரியாக கற்கள் வசி வீசப்பட்டன. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இதைத்தொடர்ந்து அந்த கும்பல் கலைந்து ஓடியது.

இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்வீச்சு தாக்குதலில் 21 போலீசார் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாசிக் நகர போலீஸ் கமிஷனர் சந்தீப் கார்னிக் கூறும்போது, ‘நீதிமன்ற உத்தரவின் பேரில் சத்பீர் தர்கா இடித்து அகற்றப்பட்டது. இதற்கு தர்கா நிர்வாகிகளும் ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து கல்வீசி, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது. இதில் 3 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன’ என்றார்.

The post நாசிக் தர்கா இடிப்பின்போது வன்முறை; 21 போலீசார் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article