நாகர்கோவில், மே 26: நாகர்கோவில் அருகே திருமணமான மகள், அவரது கணவருடன் தகராறு செய்து பிரிந்து வந்த சோகத்தில் பெண் விஷம் குடித்து குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் தங்கையா (62). விவசாயி. இவரது மனைவி பாமா (52). இவர்களது மகள் ரம்யா, திருமணமாகி தற்போது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். மகள், அவரது கணவரை பிரிந்து வந்த நாளில் இருந்து பாமா மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்தார். நேற்று முன் தினம் (24ம்தேதி) மதியம் 3 மணியளவில் கோயிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாக திரும்பி வர வில்லை. அவரை பல இடங்களில் தங்கையா மற்றும் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில், தம்மத்துக்கோணம் மன்னராஜா தெருவில் உள்ள குளத்தின் கரையில் வைத்து விஷம் குடித்த பாமா, பின்னர் குளத்துக்குள் குதித்தார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் பாமா இறந்தது தெரிய வந்தது. இது குறித்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி, பாமா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணத்துக்கு பின் தனது மகளும், மருமகனும் பிரிந்து வாழும் சோகத்தில் பாமா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post நாகர்கோவில் அருகே விஷம் குடித்து விட்டு குளத்தில் குதித்து பெண் தற்கொலை மகள், மருமகன் சண்டையால் மனம் உடைந்தார் appeared first on Dinakaran.