நாகப்பட்டினம், ஜன.23: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் கூக்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த மைய சமையல் கூடம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளி சமையல் கூடங்களில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யப்படுவது, உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் நாகூர் அரசு ஆண்டவர் மருத்துவமனையில் புதிய கட்டடம் கட்டும் பணிகள் மற்றும் பொது கழிப்பிடம் தூய்மை மற்றும் பராமரிப்பு, நாகப்பட்டினம் நகராட்சி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகட்டும் பணிகள் நடைபெறு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை ஆய்வு செய்தனர். பின்னர் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழிற்நுட்ப ஆய்வு கூடம், கீழையூர் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று மருத்துவ சேவை விவரம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்க்கொண்டார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் நீர்முளை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வண்டுவாஞ்சேரி ஊராட்சி துளசியாபட்டினம் கிராமத்தில் அவ்வையார் மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெறுவது, மருதூர் தெற்கு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள கிராம சாலை, வேதாரண்யம் அரசு கலை கல்லூரியில் புதுமைபெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மாணவ, மாணவிகளுடன் கலந்தாய்வு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
மக்களுடன் முதல்வர் முகாம் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டு பயனடைந்த கீழ்வேளுர் வட்டம் தாதன்திருவாசல் கிராமத்தில் வசிக்கும் சுரேஷ் என்பவரால் வைக்கப்பட்டுள்ள இ-சேவை மையம் ஆகிவற்றை ஆய்வு செய்தார். பின்னர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துதுறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆகாஷ், டிஆர்ஒ பேபி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் கண்ணன், மாவட்ட சமூகநல அலுவலர் திவ்யபிரபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.