*விதைகள் ஆய்வுத்துறை அதிகாரி எச்சரிக்கை
விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் நவரை பருவ நெல் சாகுபடிபணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி விதைகள்ஆய்வு துணை இயக்குநர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் விதைபண்ணைகளில் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து உதவி இயக்குநர் சரவணன் கூறியதாவது:
இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள் தரமான சான்று பெற்ற நெல் விதைகளைகொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களிலிருந்து அதிகளவில் சன்னரக உண்மை நிலை மற்றும் சான்று பெற்ற நெல் விதைகள் பெறப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பிற மாநிலங்களிலிருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் 2 மற்றும் தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவுச்சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை தவறாமல் உற்பத்தியாளர்களிடம் பெற்று ஆய்வின்போது காண்பிக்க வேண்டும். புதிய ரகங்கள் இந்த பருவத்திற்கு ஏற்றவைதானா என்பதை அறிந்துகொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
பருவத்திற்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால் நட்டவுடன் விரைவில் கதிர் வருதல், கதிர் வராமலே இருத்தல் முதலான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பருவத்திற்கேற்ற நெல் ரகங்கள் குறித்தான விவரங்களை அறிந்துகொள்ள விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
மேலும் பெறப்பட்ட விதைகளை மரச்சட்டங்களின் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல் உரம் மற்றும் பூச்சிமருந்துகளுடன் இல்லாமல் தனியார் இருப்புவைத்து பராமரிக்க வேண்டும். உரம் மற்றும் பூச்சிமருந்துகளுடன் சேர்ந்து இருப்பு வைத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் விதை விற்பனை செய்ய தடை விதிப்பதோடு உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேவையான விவரங்கள் அடங்கிய கொள்முதல் ரசீது, இருப்புப்பதிவேடு, படிவம் 2, பதிவுச்சான்று மற்றும் உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவறிக்கை நகல் ஆகிய ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை முறைப்படி பராமரிக்க வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனைபட்டியல் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும்.
விற்பனைபட்டியல் உரிய படிவத்தில் பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதிநாள், உற்பத்தியாளர் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் குறிப்பிட்டு கைெயாப்பம் பெற்று வழங்க வேண்டும். சட்டவிதிகளை மீறுவோர் மீது உரிய சட்டபிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
The post நவரை பருவத்தையொட்டி சாகுபடி தீவிரம் விதிகளை மீறி இயங்கும் விதை பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Dinakaran.