நவ.17-ல் கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்

2 months ago 11

சென்னை: நவ.17-ல் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு உருவாகாமல் தாமதமாகி வந்தது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று முதல் 18ம் தேதி வரையில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் தான் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், நவ.17-ல் கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது. மேலும், கனமழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள்வதற்கு மாவட்டம் முழுவதையும் தயார்படுத்த வேண்டும் என்றும் அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post நவ.17-ல் கனமழை எச்சரிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article