நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதிக்காக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2 hours ago 1

சென்னை: நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதிக்காக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 2 லட்சம் ரூபாயை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, கலைஞர் சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை திமுக சார்பில் வழங்கப்பட்டது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 2007ம் ஆண்டு திறந்து வைத்து கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்- பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து நலிந்தோர் மற்றும் மருத்துவம் உதவி நிதியாக வழங்கப்படுகிறது.

இதுவரை வழங்கிய நிதி ரூ.6 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம். இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் இன்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதிக்காக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article