நரசிம்ம ஜெயந்தி – 11.5.2025
அவதாரங்கள் ஏன்?
பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுக்கின்றான் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் குறிப்பாக 10 அவதாரங்களை மட்டும் நாம் சிறப்பாகப் பேசுகின்றோம். ஆயினும் அவருடைய அவதாரங்கள் அதிகம். வேதம் பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது. சாதுக்களை காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் ஏதோ ஒரு வடிவத்தில் பகவான் கீழே இறங்கி வருகிறான். “அவ” என்றாலே மேலே இருந்து கீழே என்று பொருள். (அவ என்ற சொல் கீழ் முதலிய பொருள்களைக் குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.) அவரோகணம், அவதாரம் என்ற சொற்கள் இதைக் காட்டுகின்றன, பகவான் எதற்கு மேலே இருந்து கீழே இறங்கி வர வேண்டும் என்று சொன்னால் கீழே இருப்பவர்களின் சங்கடங்களைத் தீர்ப்பதற்காகவும், அவர்களை மேல்நிலையில் உயர்த்துவதற்காகவும் இறங்கி வருகின்றான். (பிறந்தார் உயர்ந்தே-திருவாய்மொழி)
நரசிம்ம அவதாரம்
ஒரு வித்தியாசமான அவதாரம்
அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். ‘நர’ என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். சிங்க முகமும், மனித உடலும் கலந்த உருவம். இந்த அவதாரத்தில் பாதிக்கப்பட்ட பிரகலாதன், பகவானை ‘‘தன்னை காப்பாற்ற வா’’ என்று சொல்லி அழைக்கவில்லை. ஆனால் அழைக்காமலேயே பக்தனைக் காப்பாற்ற வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்.
எங்கே உன் ஹரி?
பல்வேறு அடக்குமுறைகளை பிள்ளையின் மீது ஏவுகின்றான். தந்தையின் தண்டனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பிரகலாதன், பகவானால் காப்பாற்றப்படுகின்றான். இப்படியே விட்டுவைத்தால், இவன் அசுர குலத்தின் பெருமையை குறைத்து விடுவான் என்ற அகங்காரத்தினால், அவனோடு நேருக்குநேர் மோதுவதற்கு தயாராகின்றான் தந்தையான இரண்யன். ‘‘உன்னுடைய நாராயணன் எங்கே இருக்கின்றான்?’’ என்று கேட்க, பிரகலாதன் அற்புதமான ஒரு பதிலைச் சொல்லுகின்றான். ‘‘அப்பா, நாராயணன் எங்கே இருக்கின்றான்’’ என்று கேட்கக் கூடாது? எங்கே இல்லை என்றுதான் கேட்க வேண்டும்? காரணம் அவன் இல்லாத இடமே இல்லை. விஷ்ணு என்றாலே அவன் கரந்து எங்கும் பரந்து உளன் என்றுதான் பொருள். அவன் என்னிடமும் இருக்கின்றான். உன்னிடமும் இருக்கின்றான். இந்த பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி இருக்கின்றான் என்று பல்வேறு உபநிடத வாக்கியங்களை மேற்கோள் காட்டி, தன்னுடைய தந்தையிடம் அவன் சொன்னபொழுது இரண்யன் ஆத்திரம் அடைந்தான்.
இங்கே இருக்கிறானா?
‘‘அந்தக் கதையெல்லாம் இங்கே விடாதே, இதோ இங்கே, என் எதிரே, நானே கட்டிய இந்தத் தங்கத்தூண் இருக்கிறது. இந்த தூணில் உன்னுடைய ஹரி இருக்கின்றானா?’’ என்று கேட்க, கொஞ்சமும் தயங்காமல் மகா விசுவாசத்துடன், ‘‘ஆம். இருக்கின்றான்’’ என்று பதில் சொல்ல, தன்னுடைய கதாயுதத்தினால் அந்தத் தூணை ஓங்கி அடிக்க, அந்த நிமிடமே, கோடிச் சூரிய பிரகாச ஜோதியாய் விண்ணும் மண்ணும் ஜொலிக்க பயங்கர உருவத்தோடு
நரசிம்மர் வெளிப்பட்டு, இரணியனை வதை செய்தார் என்பது வரலாறு.
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து,
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத்
தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும்
சீர்மைத்தே?
என்பது திருமொழியில் நம்மழ்வார் நரசிம்மரைக் குறித்துப் பாடிய பாசுரம்.
ஏன் நேரடியாகத் தோன்றினான்?
நரசிம்மரின் அம்சங்களை வேதத்தின் பல பாகங்களில் நாம் காண லாம். இதற்கென்றே பல உபநிஷத் வாக்கியங்கள் இருக்கின்றன. இங்கே இன்னொரு கேள்வி எழுகின்றது. பகவான் நேரடியாக அவதாரம் எடுத்து வந்து ஹிரண்யனை வதை செய்ய வேண்டுமா? இருந்த இடத்திலிருந்து தன்னுடைய கையாழியினால் (சக்கரத்தை ஏவி) வதம் செய்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் காரணம் அதுவல்ல. இரணியன், ‘‘நான் உன்னைக் கொல்லப் போகின்றேன், முடிந்தால் உன்னுடைய ஹரி உன்னை காப்பாற்றட்டும்’’ என்று சொல்லி இருந்தால், இருந்த இடத்திலிருந்து பகவான், அவனை எத்தனையோ முறை காப்பாற்றியது போல, இந்த முறையும் காப்பாற்றி இருக்கலாம். இதனை அதிர்ஷ்ட பலம் என்று சொல்வார்கள். (அதாவது மறைந்திருந்து காப்பாற்றுதல்) ஆனால் இந்தத் தூணில் உன்னுடைய ஹரி இருக்கின்றானா என்று கேட்டபோது, ‘‘இருக்கிறான்’’ என்று பிரகலாதன் பதில் சொல்ல, அந்தத் துணை அவன் ஓங்கி தட்டும் பொழுது நரசிம்ம அவதாரம் புறப்படுவதற்கு காரணம், பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக அல்ல, பிரகலாதன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வேதத்தில் நரசிம்ம வர்ணனை
அதர்வ வேதத்தில் ‘நரசிம்ம’ பூர்வதாபனீய உபநிஷத், நரசிம்மரை இப்படி வர்ணிக்கிறது. மனித வடிவம் சிங்க முகமும் பொருந்தியவர். சத்யசீலர். பரப்பிரம்ம சொரூபம். கருப்பாகவும் பொன் சிவப்பாகவும் இரண்டு வர்ணம் உடையவர். எல்லோருக்கும் மங்களத்தைச் செய்பவர். ஓம் ருதம் சத்யம் பரப்பிரமம் புருஷம் ந்ரூகேஸரி விக்ரகம் என்றபடி, எல்லா வித்தைகளுக்கும் ஈஸ்வரன். எல்லா உயிர்களுக்கும் ஈஸ்வரன். வேதத்திற்கு ஆதிநாயகன். பிரம்மாதிகளுக்கு தலைவர். யஜுர் வேதத்திலும், சாம வேதத்திலும் போற்றப்படுபவர். மூன்று திருக்கண்களை உடையவர். நினைத்த மாத்திரத்தில் ம்ருத்யுவை நாசம் செய்பவர். ஆயுளை அள்ளி வழங்குபவர்.
நரசிம்ம தத்துவம்
‘பக்த ரக்ஷணம்’ என்ற உயர்ந்த தத்துவத்தின் வெளிப்பாடுதான் நரசிம்மாவதாரம். பொதுவாக அவர் கம்பத்தில் அவதரித்தவர், அதாவது தூணில் அவதரித்தவர் என்று சொல்வார்கள். ஆயுஷ் ஹோம மந்திரத்தில் “ஸ்வர்ணரம்பக்ருஹம் அர்சயம்” என்ற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழைமரம் போல உள்ள தூண் எவனுக்கு வீடாக ஆயிற்றோ அவன் என்று கூறுகிறது. இதனால் நரசிம்மன் தூணில் இருந்து அவதாரம் செய்தார் என்பது ஆகிறது.
அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே-
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
என்ற பெரியாழ்வார் பாசுரமும் தூணில் அவதரித்த விதத்தைப் பேசுகிறது.
ஆனால், ஹரி வம்சம், பாரதம் போன்ற நூல்களில் சில இடங்களில் பிரம்மாவின் வார்த்தையைச் சத்தியமாக்குவதற்காக காட்டிலிருந்து நரசிம்ம ரூபத்தை எடுத்து வந்ததாகக் கூறுகின்றது.
நரசிம்ம அவதாரத்திற்கு என்ன தனிச்சிறப்பு?
மற்ற அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று பார்க்க வேண்டும். மற்ற அவதாரத்தில், தான் ஒரு மீனாக வடிவம் எடுத்து வந்து, பிரளயத்தில் காப்பாற்றுவேன் என்று சத்திய விரதன் என்கிற ராஜாவிடம் பகவானே சொன்னதாக வருகிறது. அதைப்போலவே கூர்மாவதாரம் எடுக்கும்போது நான் ஆமை வடிவம் எடுத்து இந்த மந்தர மலையைத் தாங்கி கடலைக் கடைந்து உங்களுக்கு அமுதம் தருவேன் என்றார். ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் முதலிய பூர்ணாவதாரங்களும் ஏற்கனவே நிர்ணயம் செய்து முன்கூட்டியே வெளிப்படுத்திய அவதாரங்கள். சில அவதாரங்களில் அவன் கர்ப்பவாசம் செய்து, சில காலம் கழித்து, தன்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறான். ஆனால் நரசிம்ம அவதாரத்தை பொறுத்தவரையில் பகவானே தான் எப்படி அவதாரம் எடுக்கப் போகின்றோம் என்பதை முன்கூட்டியே தேவர்களுக்கு அறிவித்ததாகவோ புராணங்களில் கூட இல்லை.
நரசிம்மனுக்கு அதிகமான ஆலயங்கள்
எண்ணற்ற அவதாரங்கள் பெருமாள் எடுத்திருந்தாலும் சில அவதாரங்கள் மட்டுமே பெரிய அளவில் வழிபாட்டுக்குரிய அவதாரங்களாக இருக்கின்றன. அதிலும் அதிக திருக்கோயில்கள் என்று எடுத்துக் கொண்டால், பூரண அவதாரங்களான ஸ்ரீராம அவதாரத்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும்தான் இருக்கின்றன. அதற்கு பிறகு அதிக கோயில் உள்ள அவதாரம் நரசிம்ம அவதாரம். வராக அவதாரத்திற்கு ஆலயங்கள் இருந்தாலும், அவைகள் மிகவும் குறைவு. தசாவதாரங்களில் மூன்று அவதாரங்களுக்குத் தான் மிக அதிகமான ஆலயங்கள் பூலோகத்தில் இருக்கின்றன.
ஏன் பயங்கரமான அவதாரத்தை பகவான் எடுத்தார்?
பயங்கரமான கோலத்தோடு வெகு உக்கிரமாக நரசிம்ம அவதாரத்தை எடுத்தது பக்தர்களை பயமுறுத்த அல்ல. பக்தர்களின் விரோதிகளை அச்சுறுத்தவே உக்கிர அவதாரம் எடுத்தார். பக்தர்களை அச்சுறுத்துபவர்களும் துன்பம் செய்பவர்களும் ஹிரண்யன் போல எத்தனை பெரிய வரபலம் மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு எம்பெருமான் தயங்குவதில்லை. பக்தர்களுக்கு அவன் அபயப்பிரதன். நரசிம்ம ரூபத்தை தியானிப்பவர்களுக்கு மனதில் பயம் என்பதே வருவதில்லை என்று பிரகலாதனே சொல்லுகின்றார். பகவான் சாந்தமான ரூபத்துடனும் உக்கிரமான ரூபத்துடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று வேதமே சொல்லுகின்றது. பகவானின் ஆறு குணங்களில் பலம், வீரியம், தேஜஸ் ஆகியவை உக்கிரமான ரூபத்திற்கு அடிப் படையாக விளங்குகின்றன. “வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத்”
என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம்
நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயப்படாமல் இருந்த பக்தன் பிரகலாதன் மட்டுமே. தாய் தன் குழந்தையை அணைத்துக் கொண்டு செயல்படுவது போல, பிரகலாதனை காப்பாற்ற, தன் இடுப்பில் வைத்துக்கொண்டு, இரணியனோடு போர்புரிந்ததாக ஒரு குறிப்பு இருக்கின்றது. பராசர பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக் கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார் என்று வர்ணிப்பார். ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி பல இடங்களில் வருகின்றது. நரசிம்ம வபு; என்றும், ஸ்ரீமான் என்றும்,
அமிருத்யு என்றும், ஸர்வ த்ருக் என்றும். ஸிம்ஹ: என்றும், சந்தாதா என்றும், சந்திமான் என்றும், ஸ்திர என்றும், அஜ: என்றும், துர்மர்ஷண: என்றும், சாஸ்தா என்றும், விச்ருதாத்மா என்றும் ஸூராரிஹா என்றும் வருகின்றது.
பிரதோஷ வேளையும் நரசிம்ம வழிபாடும்
பொதுவாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாட்களாக வளர்பிறை சதுர்த்தசியைச் சொல்லலாம். அதைப்போலவே சுவாதி நட்சத்திர நாளையும் பிரதோஷ நாட்களையும் ஸ்ரீ நரசிம்மர் வழிபாட்டுக்குச் சிறந்த நாட்களாகக் கருதலாம். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை அவரது அவதார திதியான வளம்பிறை சதுர்த்தசியில் பிரதோஷம் காலமான மாலை நேரத்தில் வணங்குவதன் மூலம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் (பழவினைகள்) தீரும். கடன்கள் நீங்கும். பகை, தீராத வியாதிகள் இருந்தாலும் நரசிம்மரின் பேரருளால் தீர்ந்துவிடும். அப்பொழுது கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து அவருடைய அருளைப் பெறமுடியும். இந்த மந்திரம் நரசிம்மரின் 32 எழுத்து மந்திரம் ஆகும். இதனை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மூல மந்திரம் என்பார்கள்.
ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரம்
‘‘உக்ரம் விரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம் அஹம்’’
என்பது ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரம். மனதில் ஏற்படும் பயத்தை அழித்து, ஆன்மிக ரீதியில் உற்சாகமாக வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மந்திரம். உங்கள் வாழ்க்கையை நேர்மறை மற்றும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் ஜபிப்பவருக்கு, அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரணத்தின் மரணம் (ம்ருத்யுர் ம்ருத்யும்) நிகழும். அதாவது ஆயுள் பயம் நீங்கும். நரசிம்மரை சரணடைந்து இந்த உன்னத மந்திரத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் தினமும் உச்சரிக்கும் ஒரு பக்தனின் வழியில் எந்தத் தடைகளும், தீய சக்திகளும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நிற்க முடியாது.
சுவாதி நட்சத்திரப் பெருமை
சூரியன் முன்னிலையில் இருள் நிற்காதது போல நரசிம்மரை ஒருவன் தஞ்சம் அடையும்போது, முற்றிலும் அச்சமற்றவனாகிறான். உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் என்ற மந்திரத்தில் ‘‘ஜ்வலந்தம்’’ என்கிற வார்த்தை மிக முக்கியமானது. அது லட்சுமி நரசிம்மருக்கே உரியது. ‘‘ஜ்வலந்தம்’’ என்றால் நினைத்த நேரத்தில் பிரகாசமான ஒளியுடன் மின்சாரம் போல் தோன்றுபவர் என்று பொருள். எனவே ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் ஒளி உடைய நட்சத்திரம். ராகுவிற்கு உரிய நட்சத்திரம். துலாம் ராசியில் இருக்கும் இந்த நட்சத்திரம் சுக்கிரனுடைய வீட்டில் அமைந்திருப்பதால் சகல மங்களங்களையும் ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியது. தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் சுவாதியும் ஒன்று. இந்த சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் சர்ப்ப கிரகங்களால் வருகின்ற தோஷம் நீங்கும்.
The post நலன்களை வாரி வாரி வழங்கும் ஸ்ரீநரசிம்மனைக் கொண்டாடுவோம்! appeared first on Dinakaran.