
புதுடெல்லி,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது எல்லையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தாக்குதல் நடவடிக்கை தொடர்பாக வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நமது ராணுவத்தைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது துணிச்சலான வீரர்கள் நமது சுதந்திரத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறார்கள். கடவுள் அவர்களைப் பாதுகாத்து, பொறுமையுடனும் துணிச்சலுடனும் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு அபரிமிதமான தைரியத்தைத் தருவார் ஜெய் ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.