
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இடைக்கோடு மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரினித் (வயது19). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் பிரினித், அவரது தம்பி மற்றும் 2 நண்பர்கள் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். அங்கு 4 பேரும் குளித்துவிட்டு கரை ஏறினர். அப்போது பிரினித் கால் தடுமாறி குளத்துக்குள் விழுந்தார். இதில் குளத்தில் சேற்றில் கால் புதைந்து மூழ்கி கொண்டிருந்தார். உடனே கரையில் நின்ற 3 பேரும் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் நின்றவர்களை உதவிக்கு அழைத்து பிரினித்தை மீட்டு குளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். இதில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனே அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்கக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பிரினித் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.