
கொழும்பு,
இந்தியாவின் லட்சத்தீவுகளில் உள்ள மினிகோய் என்ற சிறிய தீவை சேர்ந்த 4 மீனவர்கள், கடந்த ஜூன் 29-ந்தேதி மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். அவர்கள் சென்ற மீனவ படகு, மோசமான வானிலை காரணமாக கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் சிக்கிக் கொண்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் வேலை செய்யாததால், படகில் இருந்த மீனவர்களால் கரைக்கு எந்த தகவலும் அனுப்ப முடியவில்லை.
இந்நிலையில், காணாமல் போன மீனவ படகு குறித்து இலங்கை கடற்படைக்கு மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் தகவல் அனுப்பியது. இதையடுத்து இலங்கை கடற்படை சார்பில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம், நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட 4 மீனவர்களும் இலங்கையின் திகோவிட்டா துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் வட்டாலா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை சார்பில் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களில் மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் மற்றும் இலங்கை கடற்படை சார்பில் 2 முறையாக இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.