கோவை: தமிழகத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் 2-வது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோவை அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் கீழ் ரூ.13 கோடியில் 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் 2-வது கருவி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கருவியில் ஒரு ஸ்கேன் பரிசோதனைக்கு 20 நிமிடத்திற்குள்ளாகவே ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து கொள்ளமுடியும். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் ஸ்கேன் பரிசோதனை செய்ய முடியும் என்பதால் காத்திருப்பு காலம் குறையும்.