
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கோகோ காப் - சபலென்கா மோதினர்.
இதில் கோகோ காப் 6-7 (5-7), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபனை உச்சிமுகர்ந்தார். சபலென்கா 2-வது இடம் பிடித்தார்.
இதில் சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காபுக்கு ரூ.24.75 கோடியும், 2-வது இடத்தை பிடித்த சபலென்காவுக்கு ரூ.12.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இந்நிலையில், இறுதிப் போட்டியில் தோல்வி கண்ட பின்னர் அரினா சபலென்கா அளித்த பேட்டியில் கூறியதாவது,
இந்த தோல்வி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது கேரியரில் மிகவும் மோசமான இறுதிப்போட்டி இது. கடந்த இரண்டு வார காலம் முழுவதும் சிறந்த முறையில் டென்னிஸ் விளையாடினேன். இகா ஸ்வியாடெக் போன்ற சிறந்த வீராங்கனைகளுக்கு எதிராக கடினமான ஆட்டத்தில் விளையாடி இருந்தேன்.
இந்த வெற்றிக்கு கோகோ காப் தகுதியானார். இருந்தாலும், அரையிறுதியில் என்னை இகா ஸ்வியாடெக் வீழ்த்தி இருந்தால் சாம்பியன் பட்டம் வென்று இருப்பார் என நினைக்கிறேன். என்னால் பட்டம் வெல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். நிச்சயம் நான் வலுவாக மீண்டு வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.