
சென்னை,
சென்னை மாநகரில் பொது போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ ரயில் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி தங்களது பயணங்களை எளிதாகவும் சௌகரியமாகவும் மேற்கொண்டு வருகின்றனர். வாகன நெரிசலும், காலதாமதமும் இல்லாமல் பயணிக்க வாய்ப்பு அளிக்கின்ற மெட்ரோ ரயில்கள், சிறந்த வசதிகளுடன் அமைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
"தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பச்சை வழித்தடத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து செயிண்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ வரையிலான ரயில் சேவைகள் சிறிது தாமதத்துடன் இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்."
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.