தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று மீண்டும் தேர்வு: 51 பணியிடங்களுக்கு 4186 பேர் எழுதுகின்றனர்

2 months ago 8

சென்னை: தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்ட, அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு மீண்டும் இன்று முதல்நிலை தேர்வு நடக்கிறது. 51 பணியிடங்களுக்கு நடத்தப்படும் தேர்வை 4186 வழக்கறிஞர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர்(டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர்(கிரேடு 2) பணியில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13ம் தேதி வெளியிட்டது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு 4186 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் ஆண்கள் 2460, பெண்கள் 1725, மூன்றாம் பாலினத்தவர் 1 இடம் அடங்கும். இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடந்தது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வை முழுமையாக முடிக்க இயலவில்லை. அதைத் தொடர்ந்து, தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்த வேண்டி தேர்வாணையத்திற்கு கோரிக்கைகள் வந்தன. தேர்வர்களின் கோரிக்கையை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, டிசம்பர் 14ம் தேதியன்று நடைபெற்ற கணினிவழித் தேர்வை தேர்வாணையம் ரத்து செய்தது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறுதேர்வு, பிப்ரவரி 22ம் தேதி(இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு இன்று பிற்பகல் நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வு சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நடக்கிறது. இதற்காக 22 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2 இடங்களில் இத்தேர்வு நடக்கிறது. மேலும் ஒரு அறைக்கு ஒருவர் வீதம் 22 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கணினி வழி வாயிலாக நடக்கும் முதல்நிலை தேர்வுக்கு பொது அறிவில் 75 வினாக்களும்(பட்டப்படிப்பு தரம்), திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வு(10ம் வகுப்பு தரம்) 25 வினாக்களும், சட்டம்(பட்டப்படிப்பு தரம்) 100 வினாக்கள் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொழில்நுட்ப கோளாறால் ரத்து செய்யப்பட்ட அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு இன்று மீண்டும் தேர்வு: 51 பணியிடங்களுக்கு 4186 பேர் எழுதுகின்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article