டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர்ந்து பிரதமராக இருந்து வந்தார். இந்நிலையில் இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த ஆண்டு அங்கு போராட்டம் வெடித்தது. நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் ஷேக் ஹசினா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனை தொடர்ந்து இடைக்கால அரசு பொறுப்பேற்றது. தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எனினும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராணுவ தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இடைக்கால அரசின் மீதான மக்கள் நம்பிக்கை குறைந்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
டாக்காவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாகி வருவதாகவும் ராணுவ தலைவர் ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் தற்போது திடீரென நடந்த கூட்டமானது நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு நடக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் ஊகங்களை எழுப்பி உள்ளது. ஆனால் இது குறித்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால் உள்துறை அமைச்சர் நசிமுல் ஹக் கனி ஆட்சி கவிழ்ப்பு செய்திவெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.
The post தொடரும் எதிர்ப்பலை வங்கதேசத்தில் மீண்டும் ஆட்சி கவிழ்ப்பு? ராணுவ தளபதியின் கூட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.