
அமராவதி,
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
மேலும் தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பது தொடர்பாக சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்காத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருப்பதாவது;-
"மக்களவை அல்லது மாநிலங்களவையில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் பாதிக்காத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினை, நாட்டின் சமூக மற்றும் அரசியல் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சக்தி கொண்டது. எனவே, பிரதமர் மோடி இதில் தலையிட்டு தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.