சேலம்: தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ரத்த தான முகாம் நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.
மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி கலந்து கொண்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும். கட்சி சார்பில் இருவர் கலந்து கொண்டு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள். வேலியே பயிரை மேய்வது போல், சில ஆசிரியர்களே பள்ளி சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
பயிரைக் காப்பது போல் குழந்தைகளை ஆசிரியர்கள் பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். வரும் காலங்களில் தவெக தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டபோது, ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளுமே எதிர்க்கட்சிகள் தான். ஆனால் சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். சீமான் வழக்கு குறித்து தெரியவில்லை. காவல்துறை பாகுபாடின்றி சட்டப்படி செயல்பட வேண்டும் என்று எடப்பாடி தெரிவித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்: எடப்பாடி பேட்டி, நடிகர் விஜய் மீது தாக்கு appeared first on Dinakaran.