தைவான் நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க சென்னைக்கு அருகே சர்வதேச தரத்தில் தொழில் பூங்கா: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

5 hours ago 1

சட்டப்பேரவையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்துக்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
* தமிழ்நாட்டில் ஈர்க்கப்படும் அந்நிய நேரடி முதலீட்டில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்ட தைவான் நாட்டு நிறுவனங்களுக்கு, உதிரி பாகங்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கென சென்னைக்கு அருகில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்ப்பதுடன் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சர்வதேச தரத்தில் ஒரு பிரத்யேக தைவானிய தொழில் பூங்கா அமைக்கப்படும். மின்னணு உதிரி பாகங்கள், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் காலணி உதிரி பாகங்கள் போன்ற தொழில்களில் தைவானிய நிறுவனங்களிடம் இருந்து ரூ.10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதை இந்த பூங்கா இலக்காக கொண்டிருக்கும். இதனால் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.650 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 9000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சின்னசேலம் வட்டத்தில், சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* தென்காசி மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு ஈர்ப்பதுடன், 3000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சங்கரன்கோவில் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
* சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.200 கோடி முதலீட்டினை ஈர்ப்பதுடன், 2000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், காரைக்குடி வட்டத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
* திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி, மாநல்லுார் மற்றும் தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காக்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 22.70 மில்லியன் லிட்டர் மூன்றாம் நிலை மறுசுழற்சி நீர் விநியோகிப்பதற்கான அமைப்பு ரூ.380 கோடியில் ஏற்படுத்தப்படும்.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிள்ளைப்பாக்கம், ஒரகடம் மற்றும் வல்லம் வடகால் தொழிற்பூங்காக்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் தங்குமிட தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் 2,000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்குமிட வசதிகள் உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் கடன் பெறும் சுமார் 1300 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில், காலக்கடன்களுக்கு பெறப்பட்டு வரும் ரூ.5000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆய்வுக்கட்டணம் இந்த நிதியாண்டில் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
* தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நவீன சேமிப்பு வசதிகளின் அவசியத்தை கருதி, புதிய சேமிப்பு கிடங்குகள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கொள்கை’ வெளியிடப்படும்.
* கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் துறையில் முதலீடுகளை ஊக்குவித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக ‘கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்தும் கொள்கை 2025’ வெளியிடப்படும்.
* தஞ்சை மாவட்டத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ராஜாமடத்தில் சுமார் 100 ஏக்கரில் கடல்சார் உணவு பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி பூங்கா அமைக்கப்படும். இதனால், ரூ.200 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 2,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
* உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தங்கள் இடத்தில் இருந்தபடியே தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து சுலபமாக முடிவுகள் எடுக்க வழிவகுத்திடும் வகையில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் குறிப்பிட்ட தொழிற்பூங்காக்கள் மற்றும் ஆயத்த தொழிற்கூடங்கள் ஆகியவற்றின் மெய்நிகர் பிரதிகள் வழிகாட்டி நிறுவனத்தால் உருவாக்கப்படும்.
* வழிகாட்டி நிறுவனம் வழங்கி வரும் முதலீட்டு சேவைகளின் புதிய பரிணாமமாக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முதலீடு தொடர்பான தகவல்களை பல்வேறு மொழிகளில் அளிக்கக்கூடிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்.
* சிப்காட் தொழிற்பூங்காக்களின் தோற்றப்பொலிவை உலக தரத்திற்கு ஈடாக மேம்படுத்த ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.
* தர்மபுரி மாவட்டத்திலும், திருவள்ளூர் மாவட்டம் – மாநல்லூர் சிப்காட் தொழிற்பூங்காக்களில் தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை திறம்பட செயல்படுத்துவதற்காக ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சிப்காட் நிர்வாக அலுவலக கட்டிடங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* தமிழ்நாட்டில் சாம்சங் நிறுவனம் இன்னும் 1000 கோடி முதலீடு செய்கிறது: அமைச்சர் தகவல்
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, தொழில் முதலீட்டு ஊக்குவிக்கும் மற்றும் வர்த்தக துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் சூலூர் வி.பி.கந்தசாமி (அதிமுக) பேசியதாவது: சென்னையில் அமைந்துள்ள சாம்சங் தொழிற்சாலையில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அந்நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அடிக்கடி நடத்தி வருகின்றனர். இது பன்னாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருவதில் தயக்கம் ஏற்படும் வகையில் அமைகிறது. இந்த அரசு, நிர்வாகம் மற்றும் பணியாளர்களிடையே பேச்சுவார்தை நடத்தி சுமுக உறவு ஏற்பட தொழில் துறை அமைச்சகம் போதிய அக்கறை எடுக்காததால் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன மின்சார தயாரிப்பு தொழிற்சாலையை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கலும் சுணக்கமும் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றது.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா: சாம்சங் தொழிலாளர் பிரச்னையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் மிகவும் சிறப்பாக கையாண்டு, பொறுமை காத்து, இரு தரப்பினரிடமும் சரியான பேச்சுவார்த்தை நடத்தினார். சுமுகமாக சாம்சங் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. உங்கள் ஆட்சியில் கியா நிறுவனம் வேறு ஏதோ இடத்திற்குச் சென்றதைப்போல, நிச்சயமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்கவே நடக்காது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே இருக்கும் இந்த தொழிலாளர்களை தாண்டி இன்னும் 100 தொழிலாளர்களை அதிகமாக எடுத்து நேற்று ஒரு நல்ல செய்தியை அனுப்பியிருக்கிறது. இன்னும் ஆயிரம் கோடி ரூபாயை இந்த தமிழ்நாட்டில் நாங்கள் முதலீடு செய்வோம். முதல்வர் மீதும், மக்களின் மீதும், தொழிலாளர்கள் மீதும் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. நேற்று ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீட்டையும் உறுதி செய்திருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.

The post தைவான் நிறுவனங்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்க சென்னைக்கு அருகே சர்வதேச தரத்தில் தொழில் பூங்கா: 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு; அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா appeared first on Dinakaran.

Read Entire Article