திண்டிவனம்: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் கட்சியில் தலைவர் பதவியும், அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நிர்வாகிகள் நீக்கம், புதியதாக நியமனங்கள் தொடர்கிறது. அன்புமணி, ராமதாசும் தனக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். மேலும், ஜூலை மாதம் அன்புமணி நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே கடந்த 13ம் தேதி பாமக நிறுவனர் ராமதாசுக்கு அவரது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார். அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு தனி செயலாளராக இருந்தவர் சுவாமிநாதன். இந்நிலையில் அன்புமணி நேற்று திடீரென அவரது எக்ஸ்தளம் பக்கத்தில் ‘எனது முன்னாள் உதவியாளர் சுவாமிநாதனுடன் கடந்த 3 ஆண்டுகளாக எந்த தொடர்பும் இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியினரும், எனது நலம் விரும்பிகளும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த திடீர் அறிவிப்பு மூலம் தந்தை ராமதாசை முழுமையாக தனிமைப்படுத்தும் வகையிலேயே அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என்று கட்சி நிர்வாகிகள் பலர் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் ஒற்றுமையுடன் இணைந்து கட்சியினரை வழிநடத்த வேண்டி சமூக நலன் காத்திட வலியுறுத்தி தைலாபுரத்தில் உள்ள பெரியார், அம்பேத்கர், காரல் மார்க்ஸ் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவருமான ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனை அறிந்த ராமதாஸ் அவரை தொடர்பு கொண்டு கடுமையாக திட்டியதாகவும், நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்தக்கூடாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று காலை 10 மணிவரை தைலாபுரம் தோட்டத்திற்கு ஸ்டாலின் வரவில்லை.இதனிடையே தைலாபுரம் தோட்டத்தின் வளாக சுவற்றில் கடந்த ஒரு மாதமாக பாமகவினர் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். குறிப்பாக அன்புமணியை பாராட்டி அவரை புகழ்ந்து படங்கள், வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அன்புமணி படத்தை போட்டு அதில் வருங்கால தமிழகமே என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று அந்த போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டிருந்தன. இன்று காலை தோட்டத்திற்கு வந்த பாமகவினர் அன்புமணிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த போஸ்டர்களை அகற்றியது யார்? என்று தெரியவில்லை. இதனால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவுகிறது.
The post தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டப்பட்டிருந்த அன்புமணி போஸ்டர்கள் கிழித்து அகற்றம்: பாமகவினர் அதிர்ச்சி appeared first on Dinakaran.