தெருநாயை கடித்து குதறிய பிட்புல் வகை வளர்ப்பு நாய்: வீடியோ வைரல், போலீசில் புகார்

6 months ago 15

 

அம்பத்தூர்: அம்பத்தூர், கள்ளிக்குப்பம், மாதனாங்குப்பம் பிரதான சாலை, முத்தமிழ் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், (47) தச்சு தொழில் செய்து வருகிறார். அதே பகுதியில் சுந்தர மகாலிங்கம் என்பவரும் வசித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சுந்தர மகாலிங்கம், தன் வீட்டில் அபாயகரமான பிட்புல் வகை நாயை வளர்த்து வருகிறார். காலை மற்றும் மாலை நேரங்களில் பிட்புல் நாயை வாயை மூடாமல் வெளியில் அழைத்து வருவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி காலை பிரபாகரன், தன் வீட்டில் வளர்க்கும் நாட்டு நாயை வெளியில் அழைத்து வந்துள்ளார். அப்போது எதிரில் வந்த சுந்தர மகாலிங்கத்தின் பிட்புல் வகை நாய், பிரபாகரனின் நாட்டு நாயின் வாயை கவ்வி பிடித்து குதறியது. வலியால் துடித்த நாட்டு நாயை காப்பாற்ற அருகில் இருப்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து பிட்புல் நாய், நாட்டு நாயை விடுவித்தது. இதில், நாட்டு நாயின் வாய் மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து, அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதுகுறித்து பிரபாகரன் அளித்த புகாரின் படி, அம்பத்தூர் போலீசார், சுந்தர மகாலிங்கத்திடம் விசாரிக்கின்றனர்.

The post தெருநாயை கடித்து குதறிய பிட்புல் வகை வளர்ப்பு நாய்: வீடியோ வைரல், போலீசில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article