
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள கே.சுப்பிரமணியபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 62). விவசாயியான இவருடைய மனைவி மல்லிகா(55). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராதாகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக நீரிழிவு நோய் மற்றும் 2 கண்களிலும் நீர் வடிந்து சிரமப்பட்டு வந்துள்ளார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லையாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை.
அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 22ம்தேதி மாலையில் ஊருக்கு அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் அவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று அவரது உடலை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கழுகுலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.