
தூத்துக்குடி, லூர்தம்மாள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். மீனவரான இவருடைய மனைவி முத்துராணி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது குழந்தை மகிஷா (வயது 1½) கடந்த 15ம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் அருகே விளையாடிய குழந்தை மகிஷா எதிர்பாராதவிதமாக தண்ணீர் வாளிக்குள் விழுந்தது. இதில் மூழ்கிய குழந்தை உயிருக்கு போராடியது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை மகிஷா கடந்த 16ம்தேதி பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அருளப்பன் விசாரணை நடத்தினார். தண்ணீர் நிரப்பிய வாளியில் மூழ்கி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.