
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 9 வயது மற்றும் 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி, மறவன்மடம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஜெபராஜ் (வயது 27), தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த ஜான் கென்னடி மகன் சூரியராஜன் (வயது 34) மற்றும் தூத்துக்குடி புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பாண்டி மகன் ஜோசுவாராஜ் (வயது 25) ஆகிய 3 பேரையும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் நேற்று (08.04.2025) தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளிகளான ஜெபராஜ், சூரியராஜன் ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும், குற்றவாளி ஜோசுவாராஜ்-க்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. பிரகாஷ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி, வனிதா ஆகியோரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டு ரபீலாகுமாரி ஆகியோரையும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.