புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் சிபிஐ விசாரணை குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, ‘‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர். மேலும் விசாரணை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்’’ எனவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் எஸ்.சந்திரன், சலேஷ் குமார் உட்பட சிலர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ‘‘அதிகாரிகளின் சொத்து விவரங்களை தமிழ்நாடு மாநில லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு நாங்கள் பிறப்பித்த இடைக்கால தடை என்பது தொடரும். அதேநேரத்தில் இந்த வழக்கினை தகுதியின் அடிப்படையில் விரைந்து பட்டியலிடடு உயர்நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர்.
The post தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தகுதியின் அடிப்படையில் விசாரணை நடத்த உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.