குன்னூர் : தூதூர் மட்டம் பகுதியில் ஓராண்டுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கும் கழிப்பறையை திறந்து வைக்கக்கோரி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சிக்கு சொந்தமான தூதூர் மட்டம், மகாலிங்கம் காலனி, டெரேமியா, பிசி காலனி ஆகிய பகுதிகளில் ஊராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல தூதூர் மட்டம் பகுதியில் பேருந்து நிலையம் அருகே இருந்த பழைய கழிப்பிடத்தை இடித்து விட்டு குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிய கழிப்பிடம் கட்டப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த கழிப்பறை மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் திறந்தவெளியில் சிறுநீர் கழித்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி கழிப்பறை கட்டி முடிக்கப்பட்ட பின் மீதியான ஜல்லிக்கற்கள், மணல் மற்றும் சிமெண்ட் ஆகியவைகள் தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பதால் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கும், பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
எனவே அப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறையை விரைந்து திறக்க வேண்டும் எனவும், பயணிகளுக்கு இடையூறாக உள்ள கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தூதூர் மட்டம் பகுதியில் கட்டி முடித்து ஓராண்டாகியும் மூடிக்கிடக்கும் கழிப்பறை appeared first on Dinakaran.