தேனி: ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கிய தேனி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிரணியை சேர்ந்த 2 நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி கிழக்கு மாவட்ட அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பத்மினி மற்றும் துணைச் செயலாளர் முருகேஸ்வரி ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட இருவரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம், தெற்கு தெருவை சேர்ந்தவர்கள். மேலும், அதிமுகவில் இருந்து கொண்டு இருவரும் தொடர்ந்து, ஓபிஎஸ்சின் அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு குழு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் இருந்து வந்துள்ளனர்.
இதனால் கட்சிப் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். இவர்கள் மீது மோசடி வழக்குகளும் உள்ளன. கடந்த 9ம் தேதி பெரியகுளம் நகரில் உள்ள ஒரு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயற்சித்ததாக முருகேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
இதேபோல துணைச்செயலாளர் பத்மினி மீதும் ஆன்லைன் மோசடி வழக்குகள் உள்ளது. மேலும், இவர்களால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதாக நிர்வாகிகள் தொடர்ந்து தலைமைக்கு புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதனையடுத்தே இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும், இருவரும் கடந்த சில நாட்களாக அதிமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
The post ஓபிஎஸ் அணியுடன் பேச்சு, மோசடி வழக்கு எதிரொலி தேனி அதிமுக மகளிரணி நிர்வாகிகள் அதிரடி நீக்கம் appeared first on Dinakaran.