
கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த கள்ளக்குறிச்சி நகர முன்னாள் பா.ஜனதா தலைவர் சூரியமகாலட்சுமி, தனது கணவரும், பா.ஜனதா மாவட்ட தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவருமான சிவக்குமாருடன் சேர்ந்து தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்து விட்டதாகவும், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதியிடம் கங்கா என்பவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துமணி தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அதில் சிவக்குமாரும், சூரியமகாலட்சுமியும், கடந்த 2017-ம் ஆண்டு தீபாவளி மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில் அண்ணாநகர், ஏமப்பேர் பகுதியை சேர்ந்த மக்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மாதந்தோறும் சீட்டு கட்டி வந்தனர். மேலும் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு வரை சரியாக பணத்தை அவர்கள் கொடுத்துள்ளனர்.
அதன்பின்னர் கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து சூரியமகாலட்சுமியும், சிவக்குமாரும், தீபாவளி, ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு சரிவர பணத்தை கொடுக்காமல், அவர்களே பணத்தை வைத்துள்ளனர். இதுகுறித்து ஏலம் எடுத்தவர்கள் கேட்டதற்கு, பணத்திற்கான வட்டித்தொகையை தருவதாகவும், ஏலம் எடுத்த பணத்தை மொத்தமாக தருவதாகவும் கூறி உள்ளனர். மேலும், தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு பணத்தை வாங்கி அதிக வட்டிக்கு கொடுத்தும் சம்பாதித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டு சூரியமகாலட்சுமி மற்றும் சிவக்குமார் ஆகியோர் திடீரென தலைமறைவாகி விட்டனர். இதில் 54 பேரிடம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 66 ஆயிரத்து 867 மோசடி செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் தலைமறைவான சிவக்குமார், சூரியமகாலட்சுமி ஆகியோரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சிவக்குமாரும், சூரியமகாலட்சுமியும் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.