
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முருகனை தொட்டதே ஒரு அரசியல் தான். ஆன்மிகம், முருகன் மாநாடு, பக்தர்கள் மாநாடு என்று சொன்னால் அரசியல் இல்லையா. தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கும்போது தொடுவதற்கு என்ன காரணம் என கேட்க வேண்டும். இப்ப மாநாடு போட்டவர்கள், இதே மாநாட்டை அடுத்தாண்டு போடுவார்களா என்று கேட்கவேண்டும். ஆண்டுதோறும் இதே போன்று மாநாடு போட்டால், அரசியல் இல்லை , ஆன்மிகம். தேர்தலில் ஓட்டுவரவில்லை என்றால், இது பயனில்லை என்று விட்டு விடுவார்கள். அடுத்தாண்டு போடட்டும். அரசியலா, இல்லையா என பார்ப்போம்.
நடிகர் ஸ்ரீகாந்த் பாவம் சிக்கிக் கொண்டார். எனக்கு தெரிந்து, திரையுலகில் நிறைய பேர் போதைப் பொருள் பயன்படுத்துகின்றனர். புகழ் பெற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். ஸ்ரீகாந்த் அவர் சிக்கிகொண்டார். அவருக்காக நான் வருத்தப்படுகின்றேன். ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போதை பொருள் வராது. நீண்ட நாட்களாக இருக்கிறது. நாடெங்கும் இருக்கிறது. திரையுலகில் மட்டும் அல்ல. பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று விட்டது. அரசு நினைத்தால் போதைப் பொருள் ஒழிந்துவிடும். ஸ்ரீகாந்த் புகழ்பெற்ற நடிகர் என்பதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர் கைதாகவில்லை என்றால் விற்பனை தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.