
சென்னை,
திரைப்படங்கள் ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்யக் கோரி தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ''ஆன்லைன் விமர்சனத்தைத் தடை செய்வது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்குச் சமம். சமூக வலைதள யுகத்தில் தனிநபரோ, நாடோ தப்ப முடியாது. நீதிபதிகளையே விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.
ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்திக்கும் திரைப்படங்கள் பின்னர் வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது. அமல்படுத்த சாத்தியமில்லாத கோரிக்கையை மனுதாரர் முன் வைத்துள்ளார். புதுப்பட ஆன்லைன் விமர்சனத்தை இங்கே தடுத்தால், அஜர்பைஜானில் மற்றொருவர் அதைச் செய்வார். அப்போது என்ன செய்வீர்கள்?
நேர்மறையான விமர்சனங்களை மட்டும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக்கூடாது. புதிதாக வெளியாகும் திரைப்படங்களை பலர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பார்ப்பதற்கு வசதியாக ஓடிடி தளங்கள் உள்ளது திரையரங்குகளுக்கு புதிய சவால் என்பதை, தயாரிப்பாளர்கள் மறந்துவிடக்கூடாது'' இவ்வாறு கூறி தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தள்ளுபடி செய்தார்.