
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
கேள்வி:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது, தங்களின் அழுத்தத்தால்தான் என்று எதிர்க்கட்சிகள் கூறுகிறார்களே?. மேலும் அவர்கள் அரசாணையில் சாதி விவரங்களை சேர்க்கவில்லை என்கிறார்களே?.
பதில்:-
எந்த அழுத்தமும் இல்லை. மோடி அரசு சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி உள்ளது. பின்தங்கிய சமூகங்கள், ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பட்ஜெட்டில் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் கட்சியை போன்று துரோகம் செய்தது யாரும் இல்லை. கலேல்கர் ஆணைய அறிக்கையை மறைத்தது காங்கிரஸ்தான். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் கட்சி இல்லாத அரசாங்கம்தான் கொண்டு வந்தது.
அப்போது அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ராஜீவ்காந்தி பேசிய உரை வரலாற்றில் மிக நீளமான உரையாகும். அது இன்னும் ஒரு சாதனையாக இருக்கிறது.