திருவொற்றியூர்: திருவொற்றியூர், அண்ணாமலை நகர், 1வது தெருவில் ரேஷன் கடை உள்ளது. இங்கு 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கடை ஊழியர்கள் கிஷோர்குமார், சந்திரகுமார் ஆகியோர் வழக்கம்போல் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
பின்னர், மதிய உணவு இடைவேளைக்காக கடையை பூட்டிவிட்டு வெளியே சென்றனர். இந்நிலையில், மாலை 3.30 மணியளவில் இந்த ரேஷன் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் கடையில் இருந்த அரிசி மூட்டைகள், சர்க்கரை போன்ற உணவுப் பொருட்கள், பொங்கல் தொகுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கரும்பு மற்றும் நூற்றுக்கணக்கான கோணி பைகள் ஆகியவை எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரேஷன் கடை தீ விபத்தில் பொருட்கள் சேதமடைந்ததால் ஓரிரு நாட்கள் ரேஷன் பொருட்கள் வினியோகிப்பது தடைபடும் என கூறப்பட்டுள்ளது.
The post திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் ரேஷன் கடையில் தீவிபத்து: அரிசி மூட்டைகள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.