பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக 614 பேருந்து நிழற்குடைகளில் புதிய எல்இடி மின்விளக்குகள்: மாநகராட்சி நடவடிக்கை

5 hours ago 3

சென்னை, ஜூன் 18: பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக சென்னையில் உள்ள 614 பேருந்து நிழற்குடைகளில் புதிய எல்இடி மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தீவிர தூய்மை பணிகளும், பேருந்து நிறுத்தங்களை முழுவதுமாக சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சுழற்சி முறையில் நீர்த்தெளித்து சுத்தமாக பராமரிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சென்னை மாநகராட்சி சார்பில் மின்விளக்குகள் இல்லாத பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் மின்விளக்குகள் அமைத்தல், தேவைப்படும் இடங்களில் கூடுதலாக மின்விளக்குகள் அமைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களிலும் உள்ள பேருந்து வழித்தடங்களில் அமைந்துள்ள ஒவ்வொரு பேருந்து நிறுத்தங்களிலும் தலா 2 எல்இடி மின் குழல் விளக்குகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பேருந்து வழித்தடங்களில் அமைந்துள்ள தெருவிளக்குகள் அருகில் உள்ள 685 பேருந்து நிறுத்தங்களில் சாலையோர மின்விளக்கு இணைப்புகளிலிருந்து பேருந்து நிறுத்தங்களில் தலா 2 எல்இடி குழல் விளக்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 614 பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதர பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 2ம் கட்டமாக சாலையோர விளக்குகள் அமையாத 353 பேருந்து நிறுத்தங்களில் புதிதாக மின் மீட்டருடன் மின் இணைப்புப் பெற்று மின் விளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், கட்டுதல், பராமரித்தல் மற்றும் ஒப்படைத்தல் முறையில் பராமரிப்பில் உள்ள 637 நிழற்குடைகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மின்விளக்குகள் அமைக்கப்படும். இதன் காரணமாக, சென்னையில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் புதுப்பொலிவு பெறும், என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக 614 பேருந்து நிழற்குடைகளில் புதிய எல்இடி மின்விளக்குகள்: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article