திருவொற்றியூர்: திருவொற்றியூரில் சிக்னல் மாற்றும் பகுதியில் தண்டவாளத்தில் கருங்கல் ஜல்லிகள் வைக்கப்பட்டு இருந்தது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவொற்றியூர் ரயில் நிலைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் சென்னை சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை சென்று வரக்கூடிய ரயில்களின் போக்குவரத்திற்காக தண்டவாளத்தில் லைனை மாற்ற முயற்சித்தனர். அப்போது லைன் மாறாமல் அப்படியே இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஊழியர் நிலைய அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ரயில்வே பாதையை பராமரிக்கும் லைன்மேன் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை சோதனை செய்தார். அப்போது அங்கே ரயில்கள் போகும் பாதை மற்றும் வரும் பாதை ஆகிய இரு திசையிலும் தண்டவாளத்தில் சிறிய கருங்கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். லைன் மாறக்கூடிய இரு தண்டவாள இணைப்புக்கிடையே கருங்கல் இருந்ததால் லைன் மாற்ற முடியாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தண்டவாளத்திற்கு இடையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கற்களையும் அப்புறப்படுத்தினர். பின்னர் வழக்கம்போல் தண்டவாளத்தின் லைன்கள் மாற்றப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை சென்ட்ரல் டி.எஸ்.பி கர்ணன், ஆய்வாளர் சசிகலா ஆகியோர் கொண்ட ரயில்வே போலீசார் நேற்று நிலை அலுவலர் லைன் மேன் மற்றும் தண்டவாளத்தில் கருங்கல் வைக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறியவர்கள் கற்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் தான் விளையாட்டுக்காக தண்டவாளத்தின் நடுவே கருங்கல்லை வைத்திருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. தண்டவாளத்தில் கல் வைத்து விளையாடிய சிறியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்’ என்றனர்.
The post திருவொற்றியூரில் தண்டவாளத்தில் கருங்கல்; ரயில்களை கவிழ்க்க சதியா?: ரயில்வேதுறை உயர் அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.