தஞ்சாவூர், ஜன.21: திருவையாறு தாலுக்கா விளாங்குடி கிராமத்தை திருவையாறு நகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது: திருவையாறு பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. அதில் நகராட்சி எல்லைக்குள் எங்கள் கிராமமான விளாங்குடி இணைப்பதாக வந்த தகவலை அடுத்து எங்கள் பகுதியில் உள்ள அனைவரும் கடந்த வருடம் விளாங்குடி ஊராட்சியை திருவையாறு நகராட்சியுடன் இணைக்க வேண்டாம் தங்களிடம் மனு அளித்தோம். அதேபோல், திருவையாறு வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளோம்.
அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நடந்த குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இது நாள வரை அரசு தரப்பில் ஊராட்சி இணைப்பு தொடர்பாக எந்த பதிலும் வழங்கவில்லை. வரும் குடியரசு தினத்தன்று நகராட்சி அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எங்கள் விளாங்குடி ஊராட்சியை நகராட்சியோடு இணைக்க கூடாது, எங்கள் பகுதி ஊராட்சியாகவே தொடர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post திருவையாறு நகராட்சியுடன் விளாங்குடியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராமத்தினர் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.