
சென்னை,
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி கிராமத்தின் வார்டு-4, சின்னக்கோலடி பகுதியில் குடியிருப்புகள் அருகே சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் புறம்போக்கு நிலம் உள்ளது.அதில் 8.48 ஏக்கரில் மாங்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகளின் பாதாளச் சாக்கடை கழிவு நீரைக் கொண்டு வந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், திருவேற்காடு நகராட்சி நிர்வாகமும் செயல்படுத்தத் திட்டமிட்டு உள்ளார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் கோலடி கிராமத்தில் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு, பள்ளி மாணவர்களின் எதிர்காலமும், எதிர்கால சந்ததியினரின் நலனும் பாதிக்கப்படும் நிலையுள்ளது.
எனவே இத்திட்டத்தை மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படுத்தாமல், மக்களின் நலனைக் காக்க இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்தைத் தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.