திருவாரூர் மாவட்டத்தில் கோடை பருவத்தில் 55 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்

5 hours ago 1

*குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

*விவசாயிகள் கணக்கில் ரூ.151 கோடி வரவு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு கோடை பருவத்தில் 10 ஆயிரம் விவசாயிகளிடமிருந்து 55 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ 151 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.திருவாருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் மோகனசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சம்பா பயிர்கள் சாகுபடி நேரத்திலும், அறுவடை நேரத்திலும் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும், கோடை மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உளுந்து, பயறு, பருத்தி மற்றும் எள் பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், பருத்தி பயிருக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மாவட்டம் முழுவதும் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்மோட்டார்கள் பழுது ஏற்படும் நிலை உள்ளதால் சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும், தற்போது நடைபெற்று வரும் நிலஉடைமை பதிவில் குத்தகை விவசாயிகளையும் பதிவு செய்திட வேண்டும், உழவுக்கான மானியம் வழங்கிட வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை நேரத்தில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதை கணக்கில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.

இறுதியாக கலெக்டர் மோகனசந்திரன் பேசுகையில், கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் 5 லட்சத்து 21 ஆயிரம் மெ.டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 241 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ ஆயிரத்து 231 கோடி தொகை வரவுவைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் 2025-26ம் ஆண்டு காரீப் – கோடை பருவத்தில் உளுந்து 5 ஆயிரத்து 375 ஏக்கரிலும், எள் ஆயிரத்து 375 ஏக்கரிலும், நிலக்கடலை 875 ஏக்கரிலும் சாகுபடி செய்ய இலக்கு பெறப்பட்டு இதுவரை உளுந்து 2 ஆயிரத்து 747 ஏக்கரிலும், எள் 492 ஏக்கரிலும், நிலக்கடலை 610 ஏக்கரிலும் என மொத்தம் 3 ஆயிரத்து 849 ஏக்கர் பரப்பில் காரீப் – கோடை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், நடப்பு கோடை குறுவை பருவத்தில் 157 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சுமார் 55 ஆயிரத்து 83 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 10 ஆயிரத்து 32 விவசாயிகள் பயனடைந்துள்ள நிலையில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ 151 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில், விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபார்த்தல் முகாம் அனைத்து 555 வருவாய் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.

எனவே, விவசாயிகள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டை, நிலப்பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியுடன் முகாமிற்கு சென்று தங்களுடைய நிலப் பதிவுகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், 50 சதவீத மானியத்தில் விதைகள் வழங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ், இயந்திர நடவு இனத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு ரூ. 4 ஆயிரம்- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – நெல் இனத்தின் கீழ் ஒரு கிலோ விதைக்கு ரூ.20 மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் 10 வருடங்களுக்கு குறைவாக உள்ள விதைகளுக்கு ஊக்கத்தொகை மண் வளத்தை ஊக்குவிக்கும் பொருட்டு திரவ உயிர் உரங்கள் நுண்ணூட்ட உரக்கலவை போன்றவை மானியத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது அந்தந்த கிராமங்களுக்கு உரிய வேளாண்மை உதவி அலுவலரை அனுகி குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஒ. கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் புகாரி, ஆர்.டி.ஒக்கள் சௌம்யா, யோகேஷ்வரன்,கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா, வேளாண் இணை இயக்குநர் பாலசரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமாஹெப்சிபாநிர்மலா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விவசாயிகள் கோரிக்கை

அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும், கோடை மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட உளுந்து, பருத்தி மற்றும் எள் பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், பருத்தி பயிருக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் குறைந்த மின்அழுத்தம் காரணமாக மின்மோட்டார்கள் பழுது ஏற்படும் நிலை உள்ளதால் சீரான மின்சாரம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் கோடை பருவத்தில் 55 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Read Entire Article