திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 56 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டது

3 months ago 11

திருவாரூர், பிப். 11: திருவாரூர் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 56 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அனுப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உணவு உற்பத்தியில் டெல்டா மாவட்டங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் குறிப்பாக நெல் உற்பத்தியானது 90 சதவிகித அளவில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் குறுவை மற்றும் சம்பா என ஆண்டுஒன்றுக்கு மொத்தம் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடப்பாண்டில் அரசு சார்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருள்கள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டன. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டனர்.

இதனையொட்டி நடப்பு காரீப் (2024-25) பருவத்திற்காக கடந்த செப்டம்பர் 1ந் தேதி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 86 ஆயிரத்து 822 மெ.டென் குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்குரிய தொகை ரூ.210 கோடியானது 19 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்பின்னர் சம்பா சாகுபடியானது நடைபெற்று தற்போது அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதலுக்காக மாவட்டம் முழுவதும் 532 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கலெக்டர் மோகனசந்திரன் கூறுகையில், மாவட்டத்தில் சம்பா கொள்முதல் பணியானது கடந்த மாதம் (ஜனவரி) 1ந் தேதி முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 7ந் தேதி வரையில் 38 நாட்களில் சன்ன ரகம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 257 மெ.டன்னும், பொது ரகம் 53 ஆயிரத்து 133 மெ.டன்னும் என மொத்தம் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 390 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 6ந் தேதி வரையில் 41 ஆயிரத்து 349 விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ 369 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் 7ந் தேதி வரையில் 56 மெ.டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அரவை முகவர்களுக்கு 12 ஆயிரம் மெ.டன் நெல் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் 31 ஆயிரம் மெ.டன் நெல்கள் சேமிப்பு குடோன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 56 ஆயிரம் மெ.டன் நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டது appeared first on Dinakaran.

Read Entire Article