திருவாரூர் மாவட்டத்தில் இன்று 4.42 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

3 months ago 11

திருவாரூர், பிப்.10: திருவாரூர் மாவட்டத்தில் இன்று 4 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நீங்கலாக) குடற்புழுநீக்க மாத்திரையானது (அல்பெண்டசோல்) இன்று (10ம் தேதி) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது.குடற்குழு நீக்க மாத்திரை உண்பதால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சத்து 42 ஆயிரத்து 574 குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன் பெறுவார்கள். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொதுசுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அல்பெண்டசோல் மருந்து வழங்குதல் அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள், 1 முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும், கல்லூரிகளில் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.

நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைகள் மாத்திரை எடுத்துகொள்ள வேண்டாம். மேலும் இந்த முகாமில் இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்படாமல் விடுபட்ட அனைவருக்கும் வரும் 17ம் தேதியன்று முழுமையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடற்புழுநீக்கத்தினால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை தடுக்கப்படுவதுடன் அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்பட்டு ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துமாறு கேட்டுகொள்ளப்படுவதுடன் 20 முதல் 30 வயதுடைய பெண்களும் இந்த குடற்புழு நீக்க மாத்திரையினை உட்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் இன்று 4.42 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் appeared first on Dinakaran.

Read Entire Article