திருவாரூர், ஜன.22: திருவாரூர் மாவட்ட புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் நாளை மறுதினம் (24ந் தேதி) முதல் அடுத்த மாதம் 2ந் தேதி வரை நடைபெறவுள்ள 3வது புத்தககண்காட்சியினையொட்டி புத்தக திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வரும் அனைத்து பதிப்பகத்தினரையும் பங்கு பெற செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தககண்காட்சி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புத்தக கண்காட்சி குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. புதிய ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை ஆர்.டி.ஒ சௌம்யா கொடியசைத்து துவக்கிவைத்தார். தொடர்ந்து பேரணியானது பனகல் சாலை தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்து முடிவுற்றது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவாரூரில் புத்தக கண்காட்சி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.