சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: புராதனக் கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, சென்னை பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டிடம், ராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சி ராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் நகரில் உள்ள பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டிடங்கள் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். இந்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் பொதுப்பணித் துறைக்கு ரூ.2,457 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தணடி வரை 14.2 கி.மீ. நீளத்துக்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை ரூ.2,100 கோடி மதிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் அமைக்கப்படும். செய்யார் தொழிற்பூங்காவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த ஏதுவாக, ரூ.250 கோடி செலவில் ஒரகடம்-செய்யார் தொழில் வழித்தட திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்.